
- தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சிவசைலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. அங்குள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இன்று அதிகாலை அப்பகுதியில் காய்கறி விற்பனை செய்வதற்காக வியாபாரி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

- அப்போது, வனப்பகுதியில் இருந்த வந்த கரடி வியாபாரியை கடித்து குதறி உள்ளது. வியாபாரி கதறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வசித்து வரும் சைலப்பன், நாகேந்திரன் உள்ளிட்ட சிலர் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் கையில் கரடியை விரட்டுவதற்கான எந்தவித ஆயுதங்களும் இல்லாத நிலையில் அவர்கள் இரண்டு பேரையும் கரடி கடித்து குதறிய பின்னர் வனப்பகுதிக்குள் ஓடி விட்டது.

- இதையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஆழ்வார்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- இப்பகுதியில் வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ள நிலையில் கரடிகளை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, கரடி ஒருவரை கடித்து குதறிய வீடியோ காட்சி தற்போது வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைத்துள்ளது.

Back to top button