சத்தீஸ்கர் அரசின் இடஒதுக்கீடு நடவடிக்கையை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்! பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை!
Editor Zhagaram
சத்தீஸ்கர் அரசின் துணிச்சலான இட ஒதுக்கீடு நடவடிக்கையை தமிழக அரசு தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 81% ஆக உயர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க முன்னுதாரணம் ஆகும்!
ஓபிசி ஒதுக்கீடு 14%-லிருந்து 27% ஆகவும், பழங்குடியினர் ஒதுக்கீடு 20%-லிருந்து 32% ஆகவும் உயர்த்தப்படவுள்ளது. பட்டியலினத்தவருக்கு 12% இட ஒதுக்கீடு வழங்கப்படும். இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை உச்சநீதிமன்றம் தளர்த்தியுள்ள நிலையில் இது சாத்தியமாகக்கூடும்!
அனைத்து சமூகங்களுக்கும் அவர்களது மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இதுதான் பெரியாரின் கொள்கை. இது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற பெயரில் தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது!
சத்தீஸ்கர் அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு சமூகத்திற்கும் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.