
சென்னை ஆளுநர் மாளிகையில் பழங்குடியினர் பெருமை தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
- மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், “திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டது தவறு. விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிட பகுதி, வடபகுதி பஞ்ச ஆரிய பகுதி என்பதே பண்டைய வரலாறு. வடபகுதியிலிருப்பவர் தெற்கே வருவதும் தெற்கிலிருப்பவர் வடபகுதிக்கு செல்வதும் நீண்ட காலமாக நடந்து வருவது தான்” என குறிப்பிட்டார். மேலும் ஆங்கிலேயர் காலத்திற்கு பிறகும் திராவிட இனம் என ஆங்கிலேயர் குறிப்பிட்டதையே பின்பற்றி வருவது தவறு எனவும் தெரிவித்தார்.
- தொடர்ந்து பேசிய அவர், “பழங்குடியின மக்களிடையே செயற்கையான வகைப்படுத்தலை பிரிட்டிஷ் அரசு செய்துள்ளது. பழங்குடியின மக்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை உடைத்தெறியப்பட வேண்டும்.” என தெரிவித்தார்.
- “பழங்குடியின மக்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் 2 விதமான இட ஒதுக்கீடுகள் வழங்குகின்றன. மாநிலத்தை பொறுத்த வரை மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 8 கோடி மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் பழங்குடியினர் 8 லட்சம் பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு மாநில அரசு 1% இட ஒதுக்கீடு வழங்குகிறது. இது குறைவாக உள்ளது, இதனை கருத்தில் கொள்ள வேண்டும்” என கூறினார்.