
இரு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழக பாஜக இளைஞர் அணி தலைவரான வினோஜ் பி.செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார், வினோஜ் பி.செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி வினோஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, அந்தச் செய்தியை பகிர்ந்ததைத் தாண்டி அரசின் செயல்பாட்டை விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். இந்த பதிவுக்கு, ட்விட்டரில் அவரை பின்தொடர்பவர்கள் பதிவிட்டுள்ள கருத்துகளையும் கவனத்தில் கொண்டே அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகளுடன் மதத்தை தொடர்புபடுத்தி பதிவிட்டுள்ளதாக வாதிட்டார். இதையடுத்து வினோஜ் பி.செல்வம் முன்ஜாமீன் கோரிய வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.