ரஷ்ய படையெடுப்பிற்கு நடுவே சிக்கித் தவிக்கும் மாணவர்களையும் பிற இந்தியர்களையும் யுக்ரேனில் இருந்து மீட்டு வருவதற்காக, இந்திய அரசு நான்கு அமைச்சர்களை அனுப்புவதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யுக்ரேனின் அண்டை நாடுகளுக்கு சிறப்புத் தூதுவராக மூத்த அமைச்சர்களை அனுப்பி, இந்தியர்களை வெளியேற்றும் செயல்முறையை ஒருங்கிணைக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தெரியவந்திருக்கிறது.
மத்திய அமைச்சர்கள், ஜோதிராதித்ய சிந்தியா, ஹர்தீப் சிங் பூரி, கிரண் ரிஜிஜு மற்றும் ஜெனரல் விகே சிங் ஆகியோர் யுக்ரேனின் அண்டை நாடுகளுக்கு சிறப்பு தூதுவர்களாகச் சென்று, இந்தியர்களை யுக்ரேனில் இருந்து வெளியேற்றும் பணியை ஒருங்கிணைப்பார்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
யுக்ரேனிய வான்வெளி மூடப்பட்டுள்ளதால், இந்திய மாணவர்களை கீவில் இருந்து வெளியேற்ற யுக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா மற்றும் ஹங்கேரியை இந்தியா பயன்படுத்துகிறது.
இந்தியர்களை வெளியேற்றும் திட்டம் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோதி இன்று காலை அவசரக் கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் மேற்கூறப்பட்ட நாடுகள் வழியாக இந்தியர்களை அழைத்து வருவதற்கான தூதரக தடைகளைச் சமாளிக்க, அமைச்சர்கள் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்குப் பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.