செய்திகள்தமிழ்நாடு

சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்: பிரதமரிடம் கடிதம் மூலம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான உத்தரவாதங்களை விரைவில் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டமைக்கும், இவ்விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்தமைக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் நீங்கள் ஆர்வம் காட்டி வருகிறீர்கள். எனவே சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதுவதற்குரிய ஒத்துழைப்பை நீங்கள் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் வேண்டுகோளையேற்று, 2024 ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு, 6-5-2022 அன்று தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான உத்தரவாதங்களை ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட வேண்டி உள்ளது.

ஏற்கெனவே ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இதுதொடர்பாக 23-5-2022 அன்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. செப்டம்பர் 2022 இறுதிக்குள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்த உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதால், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் அதனை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button