
கோவில்களுக்கு பக்தர்கள் தானமாக அளிக்கும் பசுக்களை மறுதானம் செய்வதற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், பால் கொடுக்கும் பசுக்களை மட்டுமே கோவில்களுக்கு தானமாக வழங்க வேண்டுமென அரசாணையில் உள்ள நிலையில் பால் கொடுக்காத பசுக்களும் தானமாக வழங்கப்படுவதாகவும், இதன் காரணமாக இவற்றை மறுதானம் செய்யும் போது அவற்றை அடி மாட்டிற்காக வெளி சந்தையில் விற்கப்படுவதாகவும் வாதிட்டார்.
பால் கொடுக்கும் மாட்டை மட்டுமே தானமாக வழங்க வேண்டுமென அரசாணையில் குறிப்பிடப்படவில்லை எனவும் அந்த பசுக்கள் அடிமாடாக விற்கப்படுவதாக கூறுவதற்கு ஆதாரம் இருக்கிறதா? என நீதிபதி கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ரங்கராஜன் நரசிம்மன், இது தொடர்பாக தம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை எனவும் பசுக்கள் காப்பாற்ற வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவலை பெற்று தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டப்படியும், அரசாணைப்படியும் பசுக்களை மறுதானம் வழங்குவதில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.